Saturday, October 30, 2010

காசி ஆனந்தன் கவிதைகள்- 1

காசி ஆனந்தன் கவிதைகள்

kasi-anandan3

சாமி..

எங்கள் குடிசையில்
அடிக்கடி சாமி ஆடுவாள்
அம்மா ஏனோ தெரியவில்லை
அன்றும் இன்றும்
குடிசைக்கே வருகிறது சாமி
மாடிக்கே போகிறது வரம்.

போர்..

ஊரில் உங்கள் சுடுகாடு.
சுடுகாட்டில் எங்கள் ஊர்.

மானம்..

உன் கோவணம் அவிழ்க்கப்பட்டதா?
அவன் கைகளை வெட்டு
கெஞ்சி கோவணம் கட்டாதே
அம்மணமாகவே போராடு.


மந்தை..

மேடை தமிழா!
ஆடாய் மாடாய்
ஆனாயடா… நீ என்றேன்
கைதட்டினான்


உறுத்தல்..

இரவெல்லாம் விழித்திருந்து
எங்களுர் ஆச்சி இழைத்தபனைபபாய்…
வாங்கினேன் உறங்குவது எப்படி
இவள் பாயில்?

மனிதன்..

இவன் பசுவின் பாலைக்கறந்தால்
பசு பால் தரும் என்கிறான்.
காகம் இவன் வடையை எடுத்தால்
காகம் வடையை திருடிற்று என்கிறான்
இப்படியாக மனிதன்….

முரண்..

இறைவனின் வாகனம் என்றான் நாயை
அவதாரம் என்றான் பன்றியை
இறைவனே என்றான் குரங்கை
இவனே திட்டினான் என்னை
நாயே! பன்றியே! குரங்கே!

நாற்காலி..

இங்கே வேறுபாடு அதிகம் இல்லை
நாற்காலிக்கும் கட்டிலுக்கும்.
வீடு தூங்க கட்டில்
நாடு தூங்க நாற்காலி

ஞானம்..

ஞானம் பெற்றது
நீ-உன்மண்ணில் பள்ளிக் கூடங்கள்
கட்டப்பட்டதால்
நான்-என் மண்ணில்
பள்ளிக்கூடங்கள் இடிக்கப்பட்டதால்.


வில்..

வீழ்ந்த தமிழன் கதையை
விம்மி விம்மி பாடிக்கொண்டிருக்கிறது
மேடையில்-
வெட்கம் கெட்ட வில்..

காசி ஆனந்தன் கவிதைகள்



காசி ஆனந்தன் கவிதைகள்

தாயை 'இது -
உன் அம்மா
அல்ல
என் அம்மா'
என்றவனை

ஓங்கி
அறைந்தது
குழந்தை...

நீ
என்
தாய் மண்ணை
உன் தாய் மண்
என்றாய்...

அறைந்தேன்
இனியும்
அறைவேன்...

முள்ளிவாய்க்கால்
நெருப்பில் -

என்
தாய்க்குலத்தில்
பத்தாயிரம்
உயிர்களை
பாலியல்
நகங்களால்
கிழித்தெறிந்தாய்...

பூவும்
பிஞ்சும்
காயும்
கனியுமாய்
என்
தாய் மண்ணில்
நாற்பதாயிரம்
உயிர்களை
ஒரே நாளில்
சாம்பல்
ஆக்கினாய்...

உன்னிடம்
இல்லாத
புத்தனை
என்னிடம்
எப்படி
எதிர்பார்ப்பாய்?

அறைந்தேன்...
இனியும்
அறைவேன்...

குண்டுகளால்
தாய்மார்
கருப்பை
கிழித்து
என்
தாய் மண்ணில்
ஈரிலக்கம்
உயிர்களை
அழித்த
நீ
என்னை
உன் வாயால்
வன்முறையாளன்
என்றாய்...

அறைந்தேன்...
இனியும்
அறைவேன்...

உடல் கிழிந்த
தாயும்
ஊர் கிழிந்த
தாய் மண்ணுமாய்
நிற்கும்
என்னிடம்

இன்னுந்தான்
இன்னுந்தான்...

சிங்களவன்
மண்
இது
என்கிறாய்...

நீயும்
மாறப்போவதில்லை...
அதுவரை -
நானும்
மாறப்போவதில்லை...

அறைந்தேன்...
இனியும்
அறைவேன்...

Saturday, July 17, 2010

என்னடா நடக்குது இங்க...?

ஆபீசுக்கு ஒரு நாலு நாள் லீவு போட்டுட்டு அப்படியே நம்ம பொறந்த மண்ணு பக்கம் போலாமேன்னு கோயம்புத்தூர் போனேன் சாமீ...

இந்த உலக தமிழர் மாநாடுன்னு சொல்லிட்டு ஊர ஒரு வழி பண்ணி வச்சுருந்தாங்க... பாக்கறவன் எல்லாம் நான் ஏதோ கொலை குத்தம் செஞ்ச மாதிரி ஏன் உலக தமிழர் மாநாட்டுக்கு வரலைன்னு திட்டுராணுக நானும் லீவு கெடைக்கலன்னு சொல்லி சமாளிச்சேன்... ஆனா போகாததுக்கு வேற காரணம் அது தமிழ் உணர்வு இருக்கறவங்களுக்கு புரியும் ... நம்ம ஊர் பக்கம் ஒரு பலமொழி உண்டு செத்த கிளிக்கு சிங்காரம்ன்னு அது மாதிரி தமிழன காப்பாத்த வக்கில்லாதவங்க தமிழ் மொழி மாநாடு கொண்டாடுறாங்க...

மாநாட்டுளையும் பெருசா ஒன்னும் நடக்கலங்கறது பேப்பர்ல பார்த்தாலே தெருஞ்சுது.. வழக்கம் போல குடும்ப கச்சேரி தன நடந்துருக்கு இதுக்கு 380 கோடி செலவு வேற... எங்க சார் நடக்கும் இந்த மாதிரி கொடுமை எல்லாம் நம்ம தமிழ் நாட்ட தவிர.....

நம்ம நண்பன் திடீர்னு ஒரு குண்ட போட்டான் இலங்கை ராணுவத்தால் கொல்லப்பட்ட மீனவர்களுகாக போராட்டம் நடத்திய சீமான் கைது செய்யப்பட்டார்ன்னு... இந்திய இறையாண்மைக்கு எதிரா பேசிட்டாராம்.
ஆஊன்னா இறையாண்மைங்கறாங்களே அப்படீனா என்ன ன்னு தெரிஞ்சவங்க கொஞ்சம் சொல்லி குடுங்களேன் எனக்கு... தமிழன கொல்றதுக்கு ஆயுதம், பணம் குடுக்கறதா இல்ல தமிழன் செத்துட்டு இருக்கறப தமிழ் மொழி மாநாடு கொண்டடுருத என்ன எலவுன்னே புரியலப்பா....

ஆனா ஒன்னு மட்டும் தெளிவா தெரியுது தமிழன வாழ விடுங்கன்னு மட்டும் பேசிட கூடாது போல அப்ப தான் இந்திய இறையாண்மை காப்பாத்தபடும் ன்னு நெனைக்கறேன்.... வாழ்க தமிழ் ஆனால் வாழ வைப்பதற்கு தமிழன் உயிரோட இருக்க மாட்டோம்....